Monday, May 3, 2010

செண்பக பூ..


"மஹா.."

"ம்ம்.."

"ஏய்.. உன்னைதாண்டி.."

"சொல்லுடா..."

"கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்.."

"சொல்லு.."

"ப்ளிஸ்.. ஒரே ஒரு தடவ நிமிர்ந்து பாரேன்.."

"சிவா என்னனு சொல்லி தொலையேன்.. பக்கத்துல தான இருக்கேன்.."

"இல்ல என்ன பாரு அப்போ தான் சொல்லுவேன்.."

"சரி இப்போ சொல்லு.."

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?"

"கல்யாணமா...? என்ன சிவா விளையாடுறியா ?"

"இல்லடி நிஜமாதான் சொல்றேன்.. நாம ரெண்டு பெரும்
கல்யாணம் பண்ணிக்கலாம்.."

"சிவா உன்னை எனக்கு பிடிக்கும்.. அதனால தான் நீ கூப்பிட்டதும் வந்தேன்.. ஆனா நீ இப்படி திடிர்னு கேப்பன்னு நினைச்சி கூட பாக்கல .. இதெல்லாம் நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது சிவா.. நாம இப்படியே இருப்போம்.."

"இப்படியேனா?"

"இப்படி தான்.. நீ சிவா..நான் மஹா.. அது போதும்.."

"இல்ல .. இப்படி வெறும் சிவா.. மஹான்னு இருக்குறத விட.. மகாலட்சுமிசிவராமன்னு மாறனும்.."

"அது இந்த ஜென்மத்துல நடக்காது சிவா.."

"ஏன் நடக்காது?"

"ஏய்.. என்னை பத்தி தெரியும்ல.."

"தெரியும்.. "

"என்ன தெரியும்?"

"நீ மஹா.."

"அப்புறம்?"

"வயசு 26"

"அப்புறம்?"

"நான் சிவா.. வயசு 29 .. உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்.."

"ப்ச்.. என்னை பத்தி சொல்லு"

"அது.."

"ம்ம்.. அது.. "

"அது"

"சொல்லு.."

"அது.."

"சரி நானே சொல்றேன். நான் மஹா வயசு 26.. என்னோட கஸ்டமர்ங்க கிட்ட சொல்ற வயசு 22.. நான் சம்பாதிக்கிறேன்.. என்னோட உடம்ப வித்து.. பெத்த அப்பனே என்னை இந்த தொழில்ல கொண்டு வந்து விட்டுட்டான்.. நேத்து ராத்திரி வரைக்கும் பேர் தெரியாத யார் யாரோ என்னோட புருஷன்.. இன்னைக்கு யாருன்னு தெரிஞ்சிக்க இதோ இங்க உக்கார்ந்து இருக்கேன்.. சரியா? "

"......."

"நீ சிவா.. படிச்சவன்.. அழகானவன்.. நல்ல குடும்பத்துல பிறந்தவன்.. நல்ல வேலைல இருந்து நிறைய சம்பாதிகிறவன்.. என்னோட ஒன்னா படிச்சவன்.. போன மாசம் திடிர்னு என்னை வழில பார்த்து பேசி பழகி. என்னை பத்தி தெரிஞ்சதும் விலகாம இப்போ கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்றவன்.."

"........."

"சிவா.. சினிமாவுல தான் இதெல்லாம் பார்க்க நல்லா இருக்கும்.. ஆனா இது நிஜம்.. நிதர்சனம்... யோசிச்சி பாரு.. நான் என்ன தொழில் பண்றேன்னு தைரியமா சொல்றதுகே உன்னால முடியல .. நாளைக்கு கல்யணம் ஆகி நாம ரெண்டு பெரும் இதே தெருவுல போனா.. சத்தியமா புருஷன் பொண்டாட்டி போறங்கன்னா சொல்லுவாங்க? இன்னைக்கு எவனையோ பிடிசிட்டான்னு தான் பேசுவாங்க..
அப்படி பேசும் போது உன்னால தாங்க முடியுமோ இல்லையோ.. என்னோட மனச மட்டும் உண்மையா நேசிக்கிற ஒருத்தன் மனசு ஒடிஞ்சி போறத தினம் தினம் என்னால பார்க்க முடியாது சிவா.. அதுக்கு இன்னும் கொஞ்ச காலம் இந்த நரகத்துலயே வாழ்ந்து செத்து போய்டுறேன்டா .. ப்ளீஸ்.. "

"............"


"சிவா.. இப்போ கூட நீ சரின்னு சொன்னா உன்னோட படுக்க தயாரா இருக்கேன்.. சத்தியமா ஒரு கஸ்டமர் கூட படுக்குறதா நினைச்சி இல்ல. என்னையும் மனசார நேசிச்ச ஒரு மனசுக்கு நான் தர காணிக்கையா நினைச்சி.. இது தகுதியான காணிக்கை இல்லன்னு என்னக்கு தெரியும்.. யார் யாரோ.. எப்படி எப்படியோ கசக்கி பிழிந்த உடம்பு இது.. ஆனா உனக்கு கொடுக்க என்கிட்ட இந்த உடம்ப தவிர வேற ஒன்னும் இல்ல.."

" எனக்கு தேவை இந்த உடம்பு மட்டும் இல்ல மஹா.. உன்னோட மனசும் தான்"

"பொண்ணுங்கள " பூ " ன்னு சொல்லுவாங்கடா .. நான் அதுலயும் ஸ்பெஷல் கேட்டகிரி .. நான் "செண்பக பூ" டா கசக்கி பிழிய பிழிய வாசம் குடுத்துகிட்டே இருப்பேன்..வாசனை தீர்ந்து போகுற வரைக்கும் பல பேரு கசக்கி மோந்து பார்பாங்க.. காஞ்சி போனதும் குப்பைக்கு போய்டுவேன்.."

"இன்னிமே என்னோட வாழ்க்கைல உன்னை பார்க்க விரும்பலடா.. என்னை உண்மைய நேசிச்ச ஒரு மனசு இருக்குங்குற ஒரே சந்தோசம் போதும் எனக்கு.. நீ நல்லா இருக்கனும்.. சந்தோசமா இருக்கனும்.. நான் கிளம்புறேன்.. சத்தியமா உன்னை திரும்ப சந்திக்க மாட்டேன்".

கண்களை துடைத்தவாறு இவன் முகம் பார்க்காமல் திரும்பி செல்லும் மஹாவை பார்த்து கொண்டே இருப்பதை தவிர வேற ஒன்றும் தோணவில்லை அவனுக்கு.