Wednesday, October 6, 2010

வாருங்கள்... வாழ்த்துங்கள்..









நண்பர்களே வருகின்ற 11.10.2010 அன்று நண்பர் வினோத்கெளதம் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் நண்பர்கள் அனைவரும் சுற்றும் நட்பும் சூழ வந்து மணமக்களை வாழ்த்த வருமாறு எனது சார்பாகவும் நண்பர் வினோத்கெளதம் சார்பாகவும் அன்புடன் அழைக்கிறேன்.

கல்யாண நாள் : அக்டோபர் 11 திங்கட்கிழமை
(11- 10 -2010 )
நேரம்: காலை 6-00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள்
இடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், B.முட்லூர், B.K.I திருமண மண்டபம்

வரவேற்பு : அக்டோபர் 10
இரவு 7 மணிக்குமேல் 9:30 க்குள்
இடம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், B.முட்லூர், B.K.I திருமண மண்டபம்

வேலூர் வரவேற்பு : அக்டோபர் 12 மாலை 5 மணிக்குமேல்
இடம்: ரயில்வே இன்ஸ்டியுட், குடியாத்தம் ரோடு, காட்பாடி.


மாப்ள தான் பத்திரிகை வைக்கணும்னு அடம் புடிக்கிறவங்க வினோத்கெளதம் கிட்ட பேசுங்க..

நட்புடன்

-கிஷோர்

Tuesday, September 28, 2010

வழி மேல் விழி வைத்து ..

நீண்ட நாட்களாக பதிவுலகம் (?) பக்கம் வரும் வாய்புகள் குறைவாகவே இருக்கிறது. தவிர பதிவுகளை படிக்கவும் தோன்றுவது இல்லை .

நான் பல தடவ செயல்படுத்தனும்னு நினைக்கிற ஒரு விஷயத்த என்னோட நண்பர்கள் "ஜஸ்ட் லைக் தட்" ன்னு செஞ்சுடுறாங்க. ஆமா என்னோட பதிவுலக நண்பர்கள் பலரும் இப்போ எழுதுறத நிறுத்திடாங்க. ஒருவேளை நானெல்லாம் எழுதுறன்னு அப்படி ஒரு முடிவு எடுத்தாங்களோ ?



கல்லூரி காலம் முடிந்து நண்பர்களை பிரிந்து இருக்கும் நாட்களில் ஒரு வெற்றிடம் மனதில் தோன்றுமே அதை மீண்டும் இப்போ உணர்கிறேன். ஒரு பதிவு எழுதினாலே அது எவ்வளவு மொக்கையான பதிவாக இருந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து கூடி கும்மி அடித்து செல்வதும். ஒருவரை ஒருவர் ஜாலியாக வம்பிழுப்பதும் உண்மையாகவே கல்லூரி கால கட்டத்திற்கு மீண்டும் அழைத்து சென்றவர்கள்.

ஹாலிவுட் பாலா, கலையரசன், பப்பு, சர்க்கரை சுரேஷ், கண்ணா, வினோத் கெளதம் என்று ஒன்று கூடி கலாய்த்த தருணங்கள் ஒவ்வொன்றும் பசுமையாக இன்றும் மனதில்..... இவர்களில் வினோத்கெளதம் மட்டுமே எனக்கு முன்பே தெரிந்த நண்பன் . மற்ற அனைவரும் பதிவுலகம் மூலமாக கிடைத்த அழகிய நட்பு மலர்கள்.

பழகிய ஒரு சில நாட்களில் "டா" போட்டு பேசும் அளவிற்கு பாசத்துடன் கலந்த நட்பை வழங்கியவர்கள். இன்று "சில " "பல " சொந்த காரணங்களினால் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்.

பப்பு படிக்கச் சென்று விட்டான் எப்போவாவது சாட் -ல் கை அசைப்பதோடு சரி.

கலை கல்யாணத்திற்கு அப்புறம் ஆளை காணவில்லை. தொலைபேசியில் எப்போவாது பேசுவதோடு சரி.

திடீர் திடீர் என்று அலை பேசியில் தொடர்பு கொண்டு பேசி இன்ப அதிர்ச்சி தரும் சர்க்கரை சுரேஷ் இந்த பதிவுலகத்தின் மேல் கோபத்தில் சென்றவர் தான் இதுவரை பதிவுலகம் பக்கம் வர வில்லை.

ஹாலி பாலி "ப்ளாக்"யே அழித்து விட்டார். மற்றவர்களிடம் "டா" போட்டு பேசும் பொழுது இவரை மட்டும் "சார்" , "அண்ணா" என்று அழைக்க சும்மா பேர் சொல்லி கூப்பிடுங்க கிஷோர் என்று சகோதர பாசத்துடன் பழகியவர். சந்தேகம் எதுவாக இருந்தாலும் எந்த சப்ஜெக்ட் பத்தி இருந்தாலும் தயங்காமல் கேட்கலாம் இவரிடம். கொஞ்சமும் எரிச்சல்படாமல் இவரின் பணி சுமைக்கு நடுவிலும் நமக்கான நேரத்தை ஒதுக்கி தருபவர்.

வினோத் கல்யாண வேலையாக இருப்பதால் அவனை இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது.

கண்ணா மட்டும் தான் இப்பொழு எழுதி கொண்டு இருக்கிறார்.. அதுவும் முன்பு நிறைய மாதிரி எழுதுவது இல்லை அவர் எழுதி ஒரு மாதம் ஆகிறது.

இப்படி அனைவரும் ஒவ்வொரு திசை பறவைகளாய்...
ஆனால் நிச்சயம் மீண்டும் இந்த பறவைகள் அனைத்தும் இந்த பதிவுலக சரணாலயத்தில் ஒன்று கூடும் என்று அந்த வசந்த காலத்தை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும்..
- கிஷோர்

Tuesday, August 31, 2010

மாஸ்கோவின் காவிரி - திரைவிமர்சனம்

பொதுவாகவே நான் திரைவிமர்சனம் எழுதுவது கிடையாது. பலரின் பல நாட்கள் கடின உழைப்பை வெறும் 50 ரூபாய் குடுத்து பார்த்து விட்டு நல்லா இல்லை என்று ஒரு வார்த்தையில் கழித்து கட்டுவது அவர்களின் உழைப்பை அசிங்கபடுத்துவதாக எண்ணுபவன் என்ற ஒரு காரணம் ஒருபுறம் இருந்தாலும்.. திரைப்படங்களை சுவாரசியமாக ரசிக்க தெரிந்த எனக்கு அதே சுவாரசியத்தோடு விமர்சணமாக எழுத தெரியாது என்பதை இந்த மாபெரும் வாசகர்கள் கூட்டத்திலே தெள்ளத்தெளிவாக சொல்லிக்கொள்ள கடமைபட்டு இருக்கிறேன் .

அப்படி இருந்தும் சில சமயங்களில் என் மனதுக்கு பிடித்த அல்லது மனதை பாதித்த திரைப்படங்களை பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் சில பதிவுகளில் சொல்லியதுண்டு.. அதை சிலர் தலைகீழாக தொங்கி கொண்டு பார்த்தாயா என்று கேட்டதும் அந்த கேள்வியை இன்னும் சிலர் ஆமோதித்து இன்னும் உயிரோடு இருக்கிறாயா என்று பின்னூட்டம் எழுதியதும் வரலாற்றில் செதுக்கபட்டவை.

சரி விஷயத்திற்கு வருவோம்..

இன்னைக்கு சாயந்திரம் நண்பர் ஒருவரிடம் இருந்து அலைபேசி அழைப்பு.. மாஸ்கோவின் காவிரி படம் போகலாம் என்று.. சரி ஓசில தானான்னு கிளம்பி போய்டேன்..

தியேட்டர்ரில் மொத்தம் என் கண்ணில் பட்டவர்கள் 14 பேரு.. அதுல இருவர் டிக்கெட் கொடுப்பவர்கள் , இருவர் டிக்கெட் கிழிப்பவர்கள்.. ஆக மீதி படம் பார்த்தது 10 பேரு.. சாட்டிலைட் டெலிகாஸ்ட் என்பதால் படம் சரியான நேரத்திற்கு போட்டார்கள்.

படத்தின் ஸ்டில்களை பார்த்து எதோ நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு படத்தின் முதல் காட்சியில் பார்த்திபன் குரலில் ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சிலயே படத்தை பற்றிய ஒரு கணிப்பு மனக்கண்ணு முன்னாடி தெரிய ஆரம்பிச்சது.




அதாவது.. அந்த ஹீரோ சனியன் பேரு "மாஸ்கோ"வாம் அப்புறம் அந்த ஹீரோயின் மூதேவி பேரு "காவிரி "யாம்.
இதுங்க ரெண்டு பேரும் சந்திச்சி.. லவ் பண்ணி..சண்டை போட்டு.. பிரிஞ்சி.. ஒன்னு சேர்ந்து.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்பாஆஆஆஅ.

என்னோட பேராசிரியர் ஒருத்தர் செமினார் எடுக்கும் சொல்வாரு.. கிஷோர் நீ உனக்கு தெரிஞ்ச எதை வேண்டுமானாலும் பலபேர் முன்னால் தைரியமா தயக்கம் இல்லாம சொல்லு. அந்த விஷயத்த பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சி இருக்கலாம். ஆனாலும் அந்த விஷயத்த நீ எப்படி சொல்ற என்பது தான் முக்கியம்.

அதாவது மேட்டர் எதுவா இருந்தாலும் உன்னோட ப்ரெசென்ட்டேஷன் எப்படி இருக்குனு தான் பார்ப்பாங்க. அது தான் முக்கியம்னு சொல்லுவாரு. அவர் சொன்ன அந்த வார்த்தையை தான் இன்னைக்கு வரைக்கும் நான் ஒவ்வொரு முறை ப்ரெசென்ட்டேஷன் பண்ணும் போதும் மனசுல வச்சிக்கிட்டு தொடங்குவேன்.

ஒருவேளை எனக்கு ஒரு பேராசிரியர் சொல்லி தந்த மாதிரி டைரக்டர் ரவிவர்மனுக்கு யாரும் சொல்லல போல இருக்கு. அப்படி சொல்லி இருந்தா படம் பார்த்த எனக்கும் இப்போ படிக்கிற உங்களுக்கும் கஷ்டம் இல்லாம போய் இருக்கும்.

சரி படத்தோட கதை என்ன?

அன்பே ஆருயிரே , குஷி, அலைபாயுதே, படங்களை போல பையனுக்கும் பொண்ணுக்கும் காதலுக்கு அப்புறம் வரும் மிஸ்அண்டர்ஸ்டான்டிங் மற்றும் ஈகோ தான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் மாஸ்கோவின் காவேரி சென்னையின் கூவமாக மாறிவிட்டது.

இடைவேளைக்கு அப்புறம் வரும் சந்தானம்.. இதை விட மொக்கை காமெடியை இனி எந்த படத்திலும் அவர் செய்ய போவது கிடையாது..

படத்தில் உண்மையான காமெடி.. "நீயா? நானா ?" கோபிநாத் கெட்அப்பில் வரும் சீமான் தான். அதுவும் அவர் போட்டு இருக்கும் சிகப்பு கலர் கோட் சூட். அதை போட்டு கொண்டு வாழ்கையை பற்றி அவர் சீரியஸ் ஆக பேசும் காட்சி சான்சே இல்லை தாரளமாக இரண்டு நிமிஷம் வாய் விட்டு சிரிக்கலாம்..சரியான விஷுவல் ட்ரீட்.

படத்தில் உள்ள ஒரே நல்ல விஷயம் ரெண்டு மணிநேரம் ஓட கூடிய சின்ன படமாக இருப்பது தான்.


மொத்தத்தில்...

மாஸ்கோவின் காவிரி = க்கர்ர் .. சீ.. த்தூ..

Thursday, July 29, 2010

இப்போ நான் என்ன செய்ய?

நேற்று மதியம் ஒரு முக்கிய வேலையாக புதுச்சேரி செல்ல வேண்டி இருந்ததால் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு கொடுத்து விட்டு கிளம்பினேன் .

பைக்கை பஸ்ஸ்டாண்டில் விட்டுவிட்டு கடலூர் செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சில் ஏறி அமர்ந்து மொபைலில் பாட்டு கேட்க தொடங்கினேன்.
பொதுவாகவே சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் போது தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்தில் பயணம் செய்வதை விரும்புவேன். முன்னாடி போ , பின்னாடி போ , இன்னும் நகர்ந்து உக்காரு போன்ற தொல்லைகளும், போகும் ஒரு மணி நேரத்திற்கு அதிக படியான சவுண்டில் ஓடும் திரைப்படங்களும் இல்லாமல் ஏறுபவர்களை மட்டும் ஏற்றி கொண்டு செல்லும்.. ஆதலால் நிம்மதியாக பயணத்தை அனுபவிக்க அரசு பேருந்தில் பயணம் செய்வேன்.

பஸ் கிளம்பி 5 நிமிடத்தில் ஒரு சிறுமியும் (?) விடலை பையனும் ஏறினார்கள். கண்டிப்பாக கடலூரில் இருந்து வந்து சிதம்பரத்தில் பொழுதை கழித்து (!!!!!???) விட்டு பள்ளி முடியும் நேரம் கடலூர் செல்கிறார்கள் . அந்த பெண் பள்ளி சீருடையில் இருந்தாள். உடலில் உள்ள இளமை தோற்றத்தையும் மீறி முகத்தில் ஒரு குழந்தை தனம் தெரிந்தது. பையன் முகத்தில் பக்கா பொறுக்கி கலை.. பத்தாதற்கு வாயில் புகையிலை வேறு அழுத்தி இருந்தான்.

மதியவேளை என்பதால் பஸ்சில் கூட்டம் இல்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்து பேர் மட்டுமே இருந்தோம். ஏறுன சனியனுங்க என் கண் எதிர்லையா வந்து உக்காரணும்?

டிக்கெட் எடுத்த சில நிமிடங்களில் ஆரம்பித்தது இவனின் பொறுக்கிதனம். அவளின் உடல் முழுவதும் அவனின் கைகள் விளையாட ஆரம்பித்தது. அதை விட கொடுமை உச்சகட்டமாக அவன் அவளின் கையை எடுத்து தன் "மடியில்" வைத்து கொண்டது தான். அவள் வெட்கத்தாலும் கூச்சதாலும் சில சமயம் அவன் கைகளை தட்டி விட்ட போதும் அந்த உணர்வுகளை ரசித்த படி அவனுடன் நெருங்கி அமர்ந்து இருந்தாள்.

எழுந்து போய் ஓங்கி அறையலாமா என்று கோபம் வந்தது. அதை பார்த்தால் கோபம் அதிகம் ஆகும் என்று முகத்தை திருப்பி கொண்டேன்..ஆனாலும் மனசு எங்க கேக்குது? திரும்ப திரும்ப பார்க்க வைத்தது .

ஒரு மதிய வேளையில் பல பேர் பயணம் செய்யும் பேருந்தில் ஒரு ஆடவன் தன்னிடம் எல்லை மீறி செய்யும் செயலை அனுமதிக்க அவளுக்கு இந்த வயதில் எப்படி தைரியம் வந்தது? இங்கயே இப்படி செய்பவன்.. தனிமையில் என்னவெல்லாம் செய்து இருப்பான்? ஊடகங்களும் திரைப்படங்களும் தான் காரணம் என்று பொதுவாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.

வயதிற்கு வந்த பெண் பெற்றோரையும் பள்ளியையும் ஏமாற்றி விட்டு வருவது அவ்ளோ ஈஸியான விஷயமா? இதற்கு முழுமுதற் காரணங்கள் அவளின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் தான்.

ஒரு வழியாக யாரை பற்றியும் எந்தவித கவலையும் இன்றி இவர்களின் "ஓரல் செக்ஸ்" கடலூர் வரை தொடர்ந்தது. அவர்கள் ஜன்னலோரம் அமர்ந்து இருந்தலால் அவளின் புத்தக பை என் இருக்கையின் அருகில் இருந்தது. பையின் வெளியே நீட்டி கொண்டு இருந்த நோட்டில் இருந்த லேபிளில் உள்ள பெயரை படித்தேன்.. கடலூரில் உள்ள கண்டிப்புக்கு பெயர் போன ஒரு பிரபலமான பள்ளி. அவளின் பெயரும் அவள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள் என்பதும் இருந்தது. வழக்கம் போல் ஒரு சிறந்த இந்திய குடிமகனாக எவனாவது எப்படியாவது போகட்டும் என்று ஊர் வந்ததும் இறங்கி விட்டேன்.


இருந்தாலும் நேற்றில் இருந்து அந்த பெண்ணின் குழந்தை முகமும்.. வயதும்.. தப்பு பண்ணி விட்டமோ? ஓங்கி அறைந்து கேட்டு இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இப்பொழுது நேரடியாக கேக்க முடியாவிட்டாலும் அவளின் பள்ளிக்கு தகவல் தெரிவித்து அவள் பெற்றோர் மூலம் கண்டிக்க சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவ்வபொழுது எழுகிறது. அதே சமயம் இதனால் எழும் பிரச்சனையில் அவள் வயது எந்த முடிவையும் எடுக்க தயங்காது என்று நினைக்கும் பொழுது, சும்மா இருக்க சங்க எதுக்கு எடுத்து ஊதுற ? பஸ்ல போனோமா சீன பார்த்தோமான்னு இருடா உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை? என்றும் நினைக்க தோன்றுகிறது. இப்போ நான் என்ன செய்ய?

Wednesday, July 21, 2010

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ..

புதுச்சேரி என்ற ஊருல ஒரு கிளி இருந்துச்சாம், அதுக்கு கல்யாண வயசாகியும் ஜோடி கிளி கிடைக்காம ரொம்ப ஏக்கத்துல இருந்துச்சாம். அதனால அப்போ அப்போ அந்த கிளி அங்க இருந்து கிளம்பி பக்கத்துக்கு ஊரான சிதம்பரத்துல இருக்குற அதோட பிரண்ட் கிளிய போய் பார்த்து புலம்புமாம்.

இந்த கிளி புலம்புறத தாங்க முடியாத பிரண்ட் கிளி அந்த கிளிக்கு பருக மோரும்.. நீரும்.. தந்து சமாதானபடுத்துமாம். அதுலயும் சமாதானம் ஆகாத அந்த கிளி மோரையும் நீரையும் கலந்து "பருகிட்டு" பிரண்ட் கிளிய பார்த்து ஏன்டா எனக்கு இன்னும் ஜோடி கிடைக்கலன்னு.. காரணமே இல்லாம திட்டுமாம்.

இப்படி ஜோடி இல்லாம இது ஊருக்குள்ள பண்ற அழும்ப பார்த்த பெத்தவங்க கிளிங்க ரெண்டு பெரும் இதை இங்க வச்சிருந்தா "ஊருக்கு" ஆகாதுன்னு அந்த கிளிய வீட்ட விட்டு ரொம்ப தூரத்துல போய் இரை தேட அனுப்பி வச்சாங்களாம் .

வீட்ட விட்டு பிரிஞ்சி போன ஒரு பாலைவானத்துல போய் தங்குச்சாம் . அந்த பாலைவனத்துல தினமும் நேரம் காலம் பார்க்காமல் உழைச்சி இரை தேடுவதற்கு ரொம்ப கஷ்டபட்டுச்சாம். அதை பெத்தவங்க கிளிகிட்டையும் அதோட பிரண்டு கிளிகிட்டயும் தினமும் தகவல் குடுத்து ஒரே அழுகாச்சியாம்.

இது சீன் போட்டத உண்மைன்னு நம்புன பெத்தவங்க கிளி ரெண்டு பெரும் இந்த கிளிக்கு ஒரு ஜோடி கிடைச்சிட்டா சரி ஆகிடும்னு ஒரு அழகான பெண் கிளிய பார்த்து முடிவு பண்ணி இந்த கிளிகிட்ட சம்மதம் கேட்டாங்களாம் .அது பத்தாதுன்னு பிரண்ட் கிளி வேற இந்த கிளிகிட்ட அதோட விருப்பத்த பத்தி கேட்டுச்சாம் .

ஆரம்பத்துல ரொம்ப ஓவரா சீன் போட்ட அந்த கிளி..எதுவா இருந்தாலும் அந்த பெண் கிளி கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் முடிவு எடுக்க முடியும்னு சொன்ன அந்த கிளி.. ஊர்ல இருக்கும் போது வீட்டுக்கு வராம ஊரு சுத்துன அந்த கிளி.. இப்ப அந்த பெண்கிளி கிட்ட பேச ஆரம்பிச்சதும்...

ஹலோ.. .ஹலோ .. ஸ்டாப்..ஸ்டாப்.. ஹோல்ட் ஆன்..

எவனாவது கதை சொன்னா "உம்" கொட்டி கேட்டுகிட்டு இருப்பிங்களா ?
கிளி கதை கேக்குற வயசா உங்களுக்கு? வேற என்ன செய்யனுமா?

என்னங்க இப்படி கேட்டிங்க? இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? என்னது தெரியாதா? அட வாங்க.. எவ்ளோ முக்கியமான நாள் இன்னைக்கு.. அதை விட்டுட்டு கிளி கதை எல்லாம் கேட்டுகிட்டு..

22. 07 .2010 . என் நண்பன்
வினோத் கெளதம் -க்கு
பிறந்த நாள்....

இந்த சந்தோசம் உன் வாழ்வில் என்றும் நிலைத்திருக்க..

நீ விரும்பும் அனைத்தும் உன் வாழ்வில் கிடைக்க என்றும் இறைவனை பிராத்திக்கிறேன் .


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ...

WISH YOU A VERY HAPPY BIRTHDAY DA MACHAN..

இந்த வருஷம் தான் பேச்சுலரா பிறந்த நாள் கொண்டாடுவான்.. அடுத்த வருஷம் முதல் அவனுக்காகவே படைக்கபட்ட கடவுளின் வரமான பெண்ணுடன் தம்பதி சகிதமாய் கொண்டாடுவான்.

உங்களுடைய ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் கஞ்சதனம் பண்ணாம அவனுக்கு நிறைய நிறைய வாரி வழங்குங்கள்.

Friday, July 16, 2010

மாறுபட்ட கண்ணோட்டத்தில் மதராசப்பட்டினம்


நேற்று
நண்பர்களுடன் பார்த்தேன் .. படத்தை பற்றி பல விமர்சனங்கள்.. டைட்டானிக் போல இருக்கு லகான் போல இருக்கு என்று ஏகபட்ட செய்திகள். சில காட்சிகள் அதை நினைவுபடுத்துவதாக இருந்தாலும் படம் முழுவதும் ஒன்றி பயணிக்க முடிகிரறது. கதை பற்றி எல்லாம் ஏற்கனவே படித்து இருப்பீர்கள். அதனால் எனக்கு பிடித்த சில விஷயங்கள் மட்டும் ..

கலை, ஒளிபதிவு, ஆர்யா, எமி ஜாக்சன், நாசர்,அமரர் ஹனிபா, எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், ஆர்யாவின் நண்பர்கள் என்று பலரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது . ஆனால் இவர்களையும் மறக்க செய்து படம் முழுவதும் ரணகளபடுத்தி ஆடி இருப்பவர்கள் இசை அமைப்பாளரும் எமி ஜாக்சனின் வயதான வேடம் ஏற்று இருக்கும் நடிகையும் தான்.

இசைஅமைப்பாளர் பாடல்களை விடவும் சிறப்பாக பின்னணி இசையில் கதையோடு பயணம் செய்ய வைக்கிறார்.

வயதான அந்த நடிகை வெறும் முக அசைவுகளில் அவரின் எண்ண ஓட்டங்களை நமக்கு புரிய வைத்து விடுகிறார். ஆர்யாவை தேடி அலையும் போது அவருக்கு கிடைக்கும் ஒரே நம்பிக்கையான ஆர்யாவின் நண்பர் கபீர்- பார்த்தவுடன் வரும் பரவசம்..அடுத்த நிமிடமே அவர் இறந்து போகும் போது நம்பிக்கை பொய்த்து போய் மனம் உடைந்து விடும் கண்ணீர்.. இருந்தாலும் அடுத்த கணமே ஆர்யாவை மீண்டும் சந்திப்போம் என்று முகத்தில் காட்டும் தன்னம்பிக்கை.. ஆர்யாவின் முகவரி கையில் கிடைத்தவுடன் அதை வைத்து கொண்டு அவரின் வயதுக்கு மீறிய துள்ளலுடன் ஒரு நடை.. ஆர்யா சமாதி முன் வரும்போது அவரின் வயதுக்குரிய தள்ளமையுடன் வந்து அமர்வது என்று கடைசி 30 நிமிடங்கள் மிகை படுத்தாமல் அதே சமயம் தன்னுடைய நடிப்பு திறமையை எவருக்கும் விட்டு கொடுக்காமல் அமைதியாக அடித்து ஆடி இருக்கிறார்.

ஆனால் எந்த விமர்சனத்திலும் இவரை பற்றி யாரும் குறிப்பிட்டதாக தெரிய வில்லை. morgan freeman போன்றோர் ஆங்கில படங்களில் கதை முழுதும் சுமந்து நடிப்பது பற்றி சிலாகித்து எழுதும் நாம் நமது மொழியில் அது நடக்கும் போது அதை பற்றி ஏன் கண்டு கொள்ளவது இல்லை என்று தெரியவில்லை.
அவரின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆனால் எல்லோரையும் ஆட்டுவித்தவர் இயக்குனர்.. வெள்ளைகார இளமை ப்ளஸ் அழகு கொஞ்சும் ஹீரோயின்.. இளமை கட்டுடலுடன் ஒரு ஹீரோ.. அவர்களுக்குள் காதல் என்று இளமை மசாலா சமாச்சாரங்கள் தூவ பல இடங்களில் வாய்ப்பு இருந்தும் கவர்ச்சியை நம்பாமல் கதையை நம்பி எடுத்து இருக்கிறார். முகம் சுளிக்க வைக்கும் அங்க அசைவுகளோ தேவையற்ற ஆபாச காட்சிகளோ இல்லாமல் எடுத்து இருப்பது நிறைவை தருகிறது.

எனக்கு தெரிந்து கடைசியாக படத்தில் கதாநாயகன் கதாநாயகி இல்லாமல் படத்தின் இறுதி காட்சிகளை ஒரு சப்போர்டிங் ஆர்டிஸ்ட் கொண்டு நிறைவாக செய்தது சுப்ரமணியபுரம் படத்தில் தான்.. அதில் கஞ்சாகருப்பை சுற்றி படத்தின் கடைசி 10 நிமிடங்கள் இருக்கும். அதன் பிறகு இதில் தான் பார்கிறேன். இயக்குனர் விஜய்க்கு ஒரு லைப் டைம் மூவி.

சிங்கம்,புலி,சுறா, எறா, நண்டு, நண்டுவாக்களின்னு போய்கிட்டு இருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்க வேண்டிய முயற்சி. காட்சிகளின் அழுத்தத்தை உணர கண்டிப்பாக திரை அரங்கில் சென்று பாருங்கள் .

Wednesday, July 14, 2010

ஷ்ஷ்ஷ் .... இது ரகசியம் - 1

வணக்கம் ... எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு ஆசை.. ஏன் வெறின்னு கூட சொல்லலாம்.. ஒரு தொடர்கதைய எழுதிபுடனும்ணு.. நல்ல படிங்க.. அது தொடர்கதை தான் தொடர்பதிவு இல்ல.. நீங்க பாட்டுக்கு அ, ஆ.. எ ,பி, சி ,டி .. பிடிச்சது, கடிச்சதுன்னு எழுத கூப்பிடாதிங்க .. ஆமா அப்படியே என்னைய மதிச்சி நீங்க கூபிட்டுடாலும் ..

சரி விஷயத்துக்கு வருவோம்.. தொடர் எழுதுறதுன்னு முடிவு ஆகி போச்சி.. அது நெடுந்தொடரா ..குறுந்தொடரா.. இல்ல மிடுந்தொடரா.. ( அதாங்க பாதில நிறுத்துறது... எப்புடி ? நாங்களும் செம்மொழி மாநாட்டுக்கு லீவ் போட்டுட்டு பிக்னிக் போன பய பக்கிங்க தான்.. ) அப்படின்னு யோசனை வந்தப்ப
சரி கழுத எழுதுறது தான் எழுதுறோம்.. பல பய புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி இல்லைனாலும் சில "சில்வண்டு " புள்ளைங்களுக்கு புரியுற மாதிரி எழுதி வைப்போம்னு இந்த மிடுந்தொடர ஆரம்பிக்கிறேன்..

ஒரு நிமிஷங்க நம்ம கனகாவோட அப்பா பூஜைய நடத்தி முடிச்சதும் கதைய ஆரம்பிக்கலாம்..

நடிகர் ஷண்முகசுந்தரம்: ஆத்தா..மகமாயி.. ஆயரம் கண்ணு உடைய கண்ணாத்தா எங்கள காக்க வந்த காளிஆத்தா.. நம்ம புள்ள கிஷோர் புதுசா ஒரு மிடுந்தொடர ஆரம்பிக்க போகுது.. புதுசா கதை எழுதுறவன பழைய எழுதாளனுங்க மிதக்கிறது ச்சே.. மதிக்கிறது தான ஆத்தா மரியாத? அதனால நீ தான் கிஷோர்க்கு பக்க பலமா நீ இருந்து அந்த புள்ளைய காரி துப்புரவங்க , செருப்பால அடிக்கிறவங்க, எதிர் பதிவு போடுறவங்க கிட்ட இருந்து நீ தான் காப்பாத்தனும் .. எல்லோரும் நல்லா இருக்கனும் தாயி..

ட்ரைலர்....

இந்த தொடர் கதைய படிக்கச் முன்வந்த அணைத்து தைரியசாலிங்களுகும் என்னோட அசால்டான வணக்கங்கள்..

நீங்கள் தொடர்ந்து படிக்கச் போகும் இந்த கதையின் அத்தியாயங்கள் வழக்கமான காதல் ,மோதல் ,பிரிவு ,உறவு ,உணர்சிகள் அடங்கிய வழக்கமான பாணி கதைகள் அல்ல.

பொதுவாக பெற்றோர் - குழந்தைகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி, குடும்பங்கள் - உறவுகள் இடையில் எவ்ளவோ கருத்துக்கள் அதில் வேறுபாடுகள், மோதல்கள் ஆனால் இவை அனைத்தும் கலந்தாலோசித்து பேசுவதன் மூலமாகவோ அல்லது வேறு ஒரு மூன்றாம் நபரால் இயல்பாக மிக சுலபமாக தீர்த்து கொள்ள கூடிய விஷயங்கள்..

ஆனால் இது இரு நண்பர்களுக்கு இடையில் நடக்கும் நம்பிக்கை போராட்டம் பற்றிய தொடர்..

இரு நண்பர்கள் இடையே உண்மையும் நம்பிக்கையும் எவ்வளவு தூரம் பயணிகிறதோ தூரம் அதே அளவு தூரத்தை அவர்கள் காக்கும் ரகசியமும் பயணிக்கும்.

அப்படி கல்யாணம் ஆகாத இரு இளைஞ்சர்கள் இடைய உருவான நட்பில் உள்ள "நம்பிக்கை" "ரகசியங்களை " அலசி ஆராயும் தொடர்.



அத்தியாயம் -1



கிருஷ் ... ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நடுத்தர வர்கத்து வாலிபன். அழகானவன் அறிவானவன் ஒழுக்கமானவன் குறைவாய் பேசுபவன் என்று அவனை பற்றி விவரிப்பதற்கு இரண்டு மூன்று அத்தியாங்கள் தேவைபடும். ஆதலால் .. சுருக்கமாக.. அவன் கடந்து செல்லும் போது ஒரு முறையாவது அவன் பார்வை நம் மேல் விழாதா என்று ஏங்காத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. அப்படி ஏங்கதவர்கள் திருமணம் ஆகி இருப்பார்கள் அல்லது பார்வை இழந்தவர்களாய் இருப்பார்கள்.

விமல்... எப்பொழுதும் பேசிக்கொண்டு இருப்பவன்.. வேலை, அறிவு, ம்ம்... ஒழுக்கம் இவை அனைத்திலும் கிருஷை போலவே இருப்பவன் .. அழகில் பிரம்மனின் சலுகையை கொஞ்சம் அதிகமாக பெற்று கொண்டவன்.

பள்ளி காலம் முதலே இவர்களை போலவே இவர்களின் நட்பும் வளர்ந்து கொண்டு இருக்கிறது..

அதிகாலை 4.30 மணி..

செல் போன் தொடர்ந்து அழைக்க.. தூக்கத்தில் இருந்து கண்ணை விழிக்க விரும்பாத கிருஷ்.. கண்ணை மூடிய படி செல்போன் -ஐ எடுத்து காதுக்கு கொடுத்து ஹலோ என்றான் ..

"டேய் மச்சான் நான்தாண்டா.. "- விமல்

"சொல்லுடா என்ன இவ்ளோ காலைல போன்?" -கிருஷ்

"டேய்.. அது.. அது.."

"என்னடா? சீக்கிரம் சொல்லி தொல தூக்கமா வருது.."

"டேய் எப்படிடா சொல்லுவேன்?"

" ஐயோ காலைல படுத்தாதடா சொல்லு"

"டேய் எனக்கு போன்ல எப்படி சொல்றதுன்னு தெரியுல.. நீ எழுந்து குளிச்சிட்டு ரெடியா இரு .. நான் வீட்டுக்கு வரேன்.. நாம இன்னைக்கு திருச்சி போறோம்.. "

"டேய் என்னடா திடிர்னு.. இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ்.. அதுலயும?" - சலிப்புடன் கிருஷ் கூற..

"டேய் விஷயம் தெரிஞ்சா இப்படி சாதரணமா கேக்கமாட்ட?" என்றான் விமல்

"அப்போ என்ன விஷயம்னு சொல்லி தான் தொலையேன்.."

"அது.. அது.. வந்து.. மேகா .."

"என்னது ... மேகாவா .. ?

படுக்கையை விட்டு எழுந்த கிருஷ் முகத்தில் வியர்வைகள் முத்தாய் சிதறி கிடக்க அவன் கண்களின் பயம் பரவி கிடந்தது..


தொடரும்..